வெள்ளி, 22 மே, 2015

திட்டங்கள் பல போட்டும் திங்களும் வியாழனும் பட்டினியா



பெருந்தலைவர் காமராஜ் அவர்களைப் போன்ற ஒரு நேர்மையான எளிமையானத் தலைவரை இனி தமிழகம் சந்திக்குமா என்பது சந்தேகமே. அவருடைய ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலம் என்பதிலும் எவ்வித ஐயப்பாடும் கிடையாது. இப்படிப்பட்ட ஒரு தலைவர் 1967 தேர்தலில் தனது சொந்தத் தொகுதியில்  அதிகம் அறியப்படாத ஒரு மாணவத் தலைவரிடம் தோற்கும் நிலை எப்படி ஏற்பட்டது? திமுகவின் கவர்ச்சிகரமான பிரச்சார உத்திகளும் சினிமா கவர்ச்சியும் எம்ஜியார்  சுடப்பட்டதும் தான் காரணமா?இந்த காரணங்கள் 50% மட்டுமே காங்கிரஸின் தோல்விக்கு காரணமாயிருந்தன. 1962 தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் வென்றிருந்தாலும் பல மாநிலங்களில் தோல்வியைத் தழுவியது. எனவே காங்கிரஸிற்கு வலுவூட்ட வேண்டுமென்று நினைத்த காமராஜ் அவர்கள் முதியவர்கள் இளை ஞர்களுக்கு வழிவிட்டு கட்சிப் பணி ஆற்ற வேண்டுமென ஒரு திட்டம் கொண்டுவந்தார். கே ப்ளான் என பின்னர் அழைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின்படி காமராஜ் தனது முதலமைச்சர் பதவியை துறந்தார். அதுதான் தமிழக காங்கிரஸின் வீழ்ச்சிக்கு முழு முதல் காரணமாய் அமைந்தது. இந்த்த் திட்டத்தின்படி பதவி விலகிவர்களில் திரு காமராஜ் மட்டுமே குறிப்பிடும்படியானத் தலைவராகும். மற்ற எவரும் பதவியை அவ்வளவு எளிதில் துறக்க முன் வரவில்லை.. தமிழகத்தில் திரு பக்தவசலம் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். திரு பக்தவசலம் திறமையான நிர்வாகி. ஆனால் சரியான அரசியல்வாதி அல்ல.அவர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கையாண்ட விதம் தமிழகத்தில் மிகப் பெரும் கொதிப்பை உண்டாக்கியது.அப்பொழுது தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த திரு சி.சுப்ரமணியன் அவர்களும் திரு. ஓ.வி. அளகேசன் அவர்களும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகக் கூறி தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஆனாலும் தமிழக அரசு தனது கடுமையான நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் இப்பிரச்சனையை தீர்க்க ஏன் முன் வரவில்லை என்ற திமுக தரப்பு வாதத்தில் நியாயம் இருப்பதாகவே மக்கள் நினைக்க ஆரம்பித்தனர்.  மேலும் அந்த நேரத்தில் தமிழகத்தில் நிலவிய அரிசி பஞ்சம் அதனை எதிர் கொள்ள மத்திய அரசோ தமிழக அரசோ உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவதுபோல் டெல்லியிலிருந்து தமிழகம் வந்த சில மத்திய அமைச்சர்கள், அரிசி பஞ்சத்தைப் போக்க திங்கட்கிழமை ஒரு வேளையும் வியாழக்கிழமை ஒரு வேளையும் பட்டினி இருக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இது மக்களிடையே பெரும் வெறுப்பை ஏற்படுத்தியது. இதனை திமுக திறமையாக பயன்படுத்திக் கொண்டது. 'திட்டங்கள் பல போட்டும் திங்களும் வியாழனும் பட்டினியா" என்ற அதன் சுவரொட்டிகளில் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த அரிசி பிரச்சனையை ஏன் மத்திய மாநில காங்கிரஸரசுகளால் தீர்க்க முடியாமற் போனது என்பது விந்தையாகவே இருக்கிறது. பெருந்தலைவர் காமராஜ் மத்திய அரசிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தும் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் கோபம் அடைந்தனர். தேர்தலுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக இப்பிரச்சனையை சரியாக கையாளவே ரேஷன் அரிசி மக்களை சென்றடைந்தது (அதன் பிறகு இன்றுவரை அரிசி பிரச்சினையே இல்லை என்பதோடு மக்களுக்கு இலவசமாகவும் அரிசி வழங்கப்படுகிறது).இப்பிரச்சனையே காங்க்கிரஸின் வீழ்ச்சிக்கு மிகப் பெரும் காரணமாய் அமைந்தது. திரு அண்ணாதுரை அவர்கள் அரசியல் மேடைகளில் திரு காமராஜ் அவர்களை கடுமையாக தாக்கிப் பேசினாலும் தனிப்பட்ட முறையில் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். எனவேதான் அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தக் கூட யோசனை செய்தார். திரு சீனிவாசன் அவர்கள் போட்டியிட தீர்மானித்ததும் தான் அந்த தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய வரப் போவதில்லை எனத் தெரிவித்துவிட்டார். இருந்தும் கடுமையான அரிசி பஞ்சம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் செய்யப்பட்ட கடுமையான அடக்குமுறைகள் காங்கிரஸின் வீழ்ச்சிக்கும் திரு காமராஜ் அவர்களின் தோல்விக்கு காரணமாய் அமைந்தது. இப்பொழுதெல்லாம் திரு காமராஜ் அவர்களின் தோல்விக்கு மக்களின் அறியாமையும் திமுகவின் மாய்மால பிரச்சாரங்களுமே காரணமென ஊடகங்களில் பதிவுகள் செய்யப்படுகிறது. மக்கள் அறியாமையினால் திமுகவிற்கு வாக்களிக்கவில்லை. அன்றிருந்த சூழல் அவர்களுக்கு இருந்த பிரச்சனைகள் அவற்றின் அடிப்படையில்தான் வாக்களிக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர வேண்டும்.

2 கருத்துகள்:

  1. பலருக்கும் தெரியாத விடயத்தினை பகிர்ந்துள்ளீர்கள்
    நன்றி .
    இப்படியான் விடையங்களை போது வெளியில் பகிர்ந்து கொள்ளவும்

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

    பதிலளிநீக்கு