வியாழன், 2 ஜூலை, 2015

சென்னை மெட்ரோவும் ஹை கோர்ட்டும்



சென்னைக்கு மெட்ரோ  வந்ததன் காரணமாக  சென்னை மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் அழகையும் வடிவமைப்பையும் அது செல்லும் வேகத்தையும் பாமர மனிதர்களிலிருந்து பதவியில் உள்ளவர்கள் வரை அத்தனை பேரும் வியந்த வண்ணம் உள்ளனர். இது தொடர்பாக முக நூலிலும் ட்வீட்டரிலும்(தமிழில் என்ன?) இதைப் பற்றியே பேச்சு.இதைப் போலவே சென்னை உயர் நீதி மன்றக் கட்டிடம்  1904 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட பொழுது சென்னை மக்கள் அதன் அழகில் மெய் மறந்து போயிருப்பார்கள் போலிருக்கிறது. அப்பொழுது இப்பொழுது உள்ளது போல ஊடக வசதிகள் இல்லாதக் காரணத்தால் செஞ்சியை சேர்ந்த ஏகாம்பர முதலியார் என்பவர் ஐ கோர்ட்டின் அலங்கார சிந்து என்ற ஒரு கவிதை நூலையே வெளியிட்டிருக்கிறார். 8 பக்கங்களுடைய இந்நூல் லாவணி சிந்து என்று சில கவிதைப் பரிமாணங்களில் எழுதப்பட்டிருக்கிறது. இதனை சென்னை துளசிங்க முதலியார்  அண்டு கம்பெனி என்பவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். அதிலிருந்து ஒருகவிதை

விநாயகர் துதியுடன் ஆரம்பமாகிறது நூல்

அன்னை வயலரந் திருசூழ்ந்து அகிலமெல்லாம் பேறோங்கும்
சென்னை எனும் இன்னகரில் சிறப்புர- உன்னிதமாம்
ஐ கோர்ட்டின் கட்டடத்தை அகிலமிசைப் பாடுதற்கு
கை ஐந்துடைய கணன் காப்பு.

லாவணி
உன்னிதமான சென்னை  ஐ கோர்ட்டை கன்னியே நீ பாறாய்
உற்பனமாகவே அப்புறம் ஓங்கிடும் கற்பனை சீறாய்
சித்தமாகவே மெத்தையடுக்கு மூன்று வைத்து அதை வெகு சீறாய்
சிங்காரமாகவே அங்கங்கே மூலையில் தங்கும் சுழல் படி பாறாய்
இப்படியாக செப்பினால் உனக்கு ஒப்பாதடி மானே
இருக்கும் வினோதங்களை அடுக்காய் உரைத்தால் உனக்கு சேர்க்குமடித் தேனே
மண்டலம் புகழ் நொண்டி சிந்திலே விண்டிடுவேன் கேளாய்
மங்கையே உன் மனம் எங்கும் செல்லாமல் தங்கியே நீ பாறாய்

மீதி கவிதையினை நீங்களே படித்துப் பாருங்கள். தற்பொழுது இப்புத்தகம் Madurai Project தளத்தில் மின் நூலாக கிடைக்கிறது.  ( நன்றி  மதுரை ப்ராஜக்ட்)