வெள்ளி, 22 மே, 2015

திட்டங்கள் பல போட்டும் திங்களும் வியாழனும் பட்டினியா



பெருந்தலைவர் காமராஜ் அவர்களைப் போன்ற ஒரு நேர்மையான எளிமையானத் தலைவரை இனி தமிழகம் சந்திக்குமா என்பது சந்தேகமே. அவருடைய ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலம் என்பதிலும் எவ்வித ஐயப்பாடும் கிடையாது. இப்படிப்பட்ட ஒரு தலைவர் 1967 தேர்தலில் தனது சொந்தத் தொகுதியில்  அதிகம் அறியப்படாத ஒரு மாணவத் தலைவரிடம் தோற்கும் நிலை எப்படி ஏற்பட்டது? திமுகவின் கவர்ச்சிகரமான பிரச்சார உத்திகளும் சினிமா கவர்ச்சியும் எம்ஜியார்  சுடப்பட்டதும் தான் காரணமா?இந்த காரணங்கள் 50% மட்டுமே காங்கிரஸின் தோல்விக்கு காரணமாயிருந்தன. 1962 தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் வென்றிருந்தாலும் பல மாநிலங்களில் தோல்வியைத் தழுவியது. எனவே காங்கிரஸிற்கு வலுவூட்ட வேண்டுமென்று நினைத்த காமராஜ் அவர்கள் முதியவர்கள் இளை ஞர்களுக்கு வழிவிட்டு கட்சிப் பணி ஆற்ற வேண்டுமென ஒரு திட்டம் கொண்டுவந்தார். கே ப்ளான் என பின்னர் அழைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின்படி காமராஜ் தனது முதலமைச்சர் பதவியை துறந்தார். அதுதான் தமிழக காங்கிரஸின் வீழ்ச்சிக்கு முழு முதல் காரணமாய் அமைந்தது. இந்த்த் திட்டத்தின்படி பதவி விலகிவர்களில் திரு காமராஜ் மட்டுமே குறிப்பிடும்படியானத் தலைவராகும். மற்ற எவரும் பதவியை அவ்வளவு எளிதில் துறக்க முன் வரவில்லை.. தமிழகத்தில் திரு பக்தவசலம் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். திரு பக்தவசலம் திறமையான நிர்வாகி. ஆனால் சரியான அரசியல்வாதி அல்ல.அவர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கையாண்ட விதம் தமிழகத்தில் மிகப் பெரும் கொதிப்பை உண்டாக்கியது.அப்பொழுது தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த திரு சி.சுப்ரமணியன் அவர்களும் திரு. ஓ.வி. அளகேசன் அவர்களும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகக் கூறி தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஆனாலும் தமிழக அரசு தனது கடுமையான நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் இப்பிரச்சனையை தீர்க்க ஏன் முன் வரவில்லை என்ற திமுக தரப்பு வாதத்தில் நியாயம் இருப்பதாகவே மக்கள் நினைக்க ஆரம்பித்தனர்.  மேலும் அந்த நேரத்தில் தமிழகத்தில் நிலவிய அரிசி பஞ்சம் அதனை எதிர் கொள்ள மத்திய அரசோ தமிழக அரசோ உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவதுபோல் டெல்லியிலிருந்து தமிழகம் வந்த சில மத்திய அமைச்சர்கள், அரிசி பஞ்சத்தைப் போக்க திங்கட்கிழமை ஒரு வேளையும் வியாழக்கிழமை ஒரு வேளையும் பட்டினி இருக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இது மக்களிடையே பெரும் வெறுப்பை ஏற்படுத்தியது. இதனை திமுக திறமையாக பயன்படுத்திக் கொண்டது. 'திட்டங்கள் பல போட்டும் திங்களும் வியாழனும் பட்டினியா" என்ற அதன் சுவரொட்டிகளில் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த அரிசி பிரச்சனையை ஏன் மத்திய மாநில காங்கிரஸரசுகளால் தீர்க்க முடியாமற் போனது என்பது விந்தையாகவே இருக்கிறது. பெருந்தலைவர் காமராஜ் மத்திய அரசிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தும் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் கோபம் அடைந்தனர். தேர்தலுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக இப்பிரச்சனையை சரியாக கையாளவே ரேஷன் அரிசி மக்களை சென்றடைந்தது (அதன் பிறகு இன்றுவரை அரிசி பிரச்சினையே இல்லை என்பதோடு மக்களுக்கு இலவசமாகவும் அரிசி வழங்கப்படுகிறது).இப்பிரச்சனையே காங்க்கிரஸின் வீழ்ச்சிக்கு மிகப் பெரும் காரணமாய் அமைந்தது. திரு அண்ணாதுரை அவர்கள் அரசியல் மேடைகளில் திரு காமராஜ் அவர்களை கடுமையாக தாக்கிப் பேசினாலும் தனிப்பட்ட முறையில் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். எனவேதான் அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தக் கூட யோசனை செய்தார். திரு சீனிவாசன் அவர்கள் போட்டியிட தீர்மானித்ததும் தான் அந்த தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய வரப் போவதில்லை எனத் தெரிவித்துவிட்டார். இருந்தும் கடுமையான அரிசி பஞ்சம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் செய்யப்பட்ட கடுமையான அடக்குமுறைகள் காங்கிரஸின் வீழ்ச்சிக்கும் திரு காமராஜ் அவர்களின் தோல்விக்கு காரணமாய் அமைந்தது. இப்பொழுதெல்லாம் திரு காமராஜ் அவர்களின் தோல்விக்கு மக்களின் அறியாமையும் திமுகவின் மாய்மால பிரச்சாரங்களுமே காரணமென ஊடகங்களில் பதிவுகள் செய்யப்படுகிறது. மக்கள் அறியாமையினால் திமுகவிற்கு வாக்களிக்கவில்லை. அன்றிருந்த சூழல் அவர்களுக்கு இருந்த பிரச்சனைகள் அவற்றின் அடிப்படையில்தான் வாக்களிக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர வேண்டும்.

திங்கள், 11 மே, 2015

தமிழகத்தில் வாழ்ந்த சில பைத்தியக்காரர்கள்



இளவரசனின் தேர் காலில் விழுந்து இறந்த கன்றின் உரிமையாளனிடம்  "சாலையில் ஏன் கன்றினை அவிழ்த்துவிட்டாய் இவனை சிறையில் அடையுங்கள்" என உத்தரவிடாமல் தன் மகனை தேர் காலில் இட்ட அரைக்க முனைந்தானே மனு நீதி சோழன் அவன் பைத்தியம் அல்லவா?

கண்ணகி இன்னொரு சிலம்பினை கொண்டு வந்து தன் கணவன் குற்றவாளி இல்லை என சொன்னவுடன் "ஆகா இதோ இன்னொரு சிலம்பும் கிடைத்துவிட்டது மனைவியும் கணவனும் கூட்டு களவாணிகள் இவளை சிறையில் அடையுங்கள்" என உத்தரவிடாமல் யானோ அரசன் யானே கள்வன் என உயிர் விட்டானே பாண்டியன் நெடுஞ்செழியன்  அவன் ஒரு பைத்தியகாரன்!

பிழையான பாட்டை கொண்டு வந்தது இறைவன் எனத் தெரிந்ததும்  "என்ன ஒரு அருமையான கவிதை சிவனின் பாடலை இந்த சிறுவன் எடைபோட முடியுமா?" எனப் புகழ்ந்து வேண்டிய வரங்களை பெறுவதை விட்டு நெற்றி கண்ணை காட்டினும் குற்றம் குற்றமே என எரிந்து போனானே நக்கீரன் அவன் ஒரு பைத்தியகாரன்!

முல்லை கொடி தன் தேர் மீது படர்ந்திருப்பதை பார்த்ததும் "தேர் நிலையை சரியாக பராமரிக்காதப் பணியாளர்களை உடன் சஸ்பெண்ட் செய்யுங்கள்" என உத்தரவிடாமல் தனது தேரை அங்கேயே நிறுத்திவிட்டுப் போனானே வள்ளல் பாரி அவன் ஒரு பைத்தியகாரன் அல்லவா?

அடுத்து இவன் தான் ஆட்சிக்கு வருவான் என இளங்கோவடிகளை பார்த்து ஆரூடக்காரன் சொன்னவுடன் "அப்படியா? அப்படியென்றால் ஆக வேண்டியதை கவனியுங்கள்.எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை" என சொல்லாமல் அண்ணனுக்காக ஆட்சியை துறந்தாரே இளங்கோவடிகள் அவர் ஒரு பைத்தியகாரர்!

நீரைத் தேக்கி அதனை பாசனத்திற்கு பயன்படுத்தலாம் என்று அக்காலத்தில் கனவில் கூட யாரும் காணாத சிந்தனையை நனவாக்கி அதற்கு கரிகாலன் அணை எனப் பெயரிடாமல் கல்லணை என்று பெயரிட்ட கரிகால் பெரு வளத்தான் அவன் ஒரு பைத்தியகாரன்!

உலகெங்கும் ஆட்சி செய்த மன்னர்கள் எல்லாம் தங்கள் அரண்மனைகளை இன்றும் உலகம் வியக்கும் வண்ணம் அமைத்து வாழ்ந்திருக்கிறார்களே   ஆனால் நம் தமிழ் மன்னர்கள் என்ன செய்தார்கள் பெரும் பெரும் ஆலயங்களை நிறுவினார்களைத் தவிர தங்கள் அரண்மணைகளை அவ்வாறு எவரும் நிர்மாணிக்கவில்லையே அவர்கள் அத்தனை பேருமே பைத்தியகாரர்களன்றி வேறென்ன சொல்வது?

வெள்ளி, 8 மே, 2015

சல்மான் வழக்கிற்கும் இதற்கும் தொடர்பில்லை



சமன் செய்து சீர் தூக்கும் அப்படின்னு வள்ளுவர் ஏதோ எழுதி வச்சுட்டு போயிட்டார். நம்ம நாட்டு சட்டத்தை வடிவமைச்சவங்களும் அதையே பின்பற்றி செஞ்சுட்டு போய்ட்டாங்க.ஆனால் இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில அதெல்லாம் சரிபடுமா? அதனால நம்ம  குற்றவியல் சட்டத்தில உடனடியா சில மாற்றங்களை கொண்டு வரணும் முதல்ல ஜனங்களை நாலா பிரிக்கணும்.அய்யயோ வர்ணாஸ்ரம் இல்லிங்க இது வேற மாதிரி. 

முதல்ல A க்ருப். இதில அரசியல் வாதிங்க பெரிய ஆஃபிசருங்க இவங்கள்ளாம் அடங்குவாங்க.இவங்கள்ளாம் என்ன தப்பு செஞ்சாலும் ஒரு FIR கூட போடக் கூடாது. அவங்க தப்புக்கு தகுந்த மாதிரி பத்ம பூஷன் பாரத் ரத்னா போன்ற விருதுகளுக்கு இணையா ஏதேனும் விருது கொடுத்து கௌரவிக்கணும்.

ரெண்டாவது B க்ருப்.இதில பிரபலமான நடிகர்கள் விளையாட்டு வீரர்கள் இவர்கள் எல்லாம் அடங்குவாங்க. இவங்க தப்பு செஞ்சா FIR  போடலாம்.ஆனால் சாட்சி சொல்ல யாரும் வரக் கூடாது. இவங்க தண்ணி அடிச்சுட்டு வண்டி ஓட்டுனா மதுவோட தீமையை விளக்கத்தான் அப்படி செஞ்சாங்கன்னு அரசாங்கமே மக்களுக்கு எடுத்து சொல்லனும். ட்ராபிக்ல யாரையாவது அடிச்சு கொன்னுட்டாக் கூட, சட்டம் ஒழுங்கை காப்பாத்தத்தான் அப்படி செஞ்சாங்கன்னு அவங்களுக்கு பாராட்டு விழா நடத்தி பரிசும் கொடுக்கலாம். இதையெல்லாம் மீறி அவங்களுக்கு தண்டனை கொடுத்துத்தான் ஆகனும்னு ஒரு நிலை வந்துட்டா அந்த தண்டணையை அவங்க சார்பா வேற யாராவது அனுபவிக்கிற மாதிரி சட்டத்தில் மாற்றம் கொண்டு வரணும். அவங்க நடிச்ச படம் வரலைன்னா மக்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை எண்ணி உடனே இந்த சட்ட மாற்றத்தை கொண்டு வரணும். முடிஞ்சா இவங்க மேல  FIR  போட்ட அந்த ஆபிசருக்கு ஆயுள் தண்டனை வழங்கலாம்.

மூணாவது C க்ருப். இதில் எம் எல் ஏ க்கள் கவுன்கிலர்கள் இரண்டாம் நிலை அதிகாரிகள் இவர்கள் அடங்குவார்கள். இவர்கள் மீது FIR  போடலாம்.கைதும் செய்யலாம். ஆனால் விசாரணையை சீக்கிரம் முடிக்கக் கூடாது. மக்கள் பரபரப்பா வேறு விஷயத்தில் ஆழ்ந்திருக்கும்போது இவங்களை ரீலீஸ் பண்ணிடலாம்.இவங்க பெரும்பாலும் தங்கள் மேல் மட்டதின் மீதான விசுவாசத்தை காண்பிக்கத்தான் குற்றங்களில் ஈடுபடுவதால், இவர்கள் விடுதலை ஆனவுடன், எம் எல் ஏவாக இருந்தால் மந்திரியாகவும் கவுன்ஸிலராக இருந்தா எம் எல் ஏ வாகவும் ப்ரமோஷன் கொடுக்கலாம்.

நான்காவது D க்ருப்.இதில் கடை நிலை ஊழியர்கள் நம்மை போன்று அப்பாவி மக்கள் அடங்குவார்கள். இவர்களை அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள்  எனப் பிரகடனம் செய்யலாம்.ஐம்பது ரூபா லஞ்சம் வாங்குற கீழ் மட்ட அலுவலர்களை சும்மா விடக் கூடாது. அவங்களுக்கு கடுமையான தண்டணை கொடுக்கணும். அவங்க போட்டோவை பேப்பர் டிவியில் எல்லாம் போட்டு அசிங்கபடுத்தணும். அவங்க குடும்பத்தை எவ்வளவு அசிங்க படுத்த முடிமோ அந்த அளவு அசிங்கப்படுத்தனும். தண்ணி வரலைன்னு யாராவது போராட்டம் பண்ணினா அவங்களுக்கு  ஆயுள் தண்டனை கொடுக்கணும். இந்த மக்கள் அது வேணும் இது வேணும்னு ஏதாவது போராட்டம் பண்ணாமல் இருக்க ஒவ்வொரு வாக்களாருக்கும் ஒவ்வொரு வேட்பாளரும் ரூபாய் ஐநூறும் அரசாங்க சார்பா மானியமா ரூபாய் ஐநூறும்  ஒவ்வொரு தேர்தலின் போதும் கொடுக்கனும்னு சட்டத்தில் உடனடியா மாற்றம் கொண்டு வரணும். 

இந்த மாற்றங்களை உடனடியா கொண்டு வந்தா, நம்முடைய ஜனநாயகம் மேலும் வலுபெறும் என்பது நிச்சயம்.