வெள்ளி, 8 ஏப்ரல், 2011

தோனி- தன்னிகரற்ற தலைவன்!


இந்திய கிரிக்கெட்டை நீண்ட நாட்களாக கவனித்து வருபவர்களில் நானும் ஒருவன். நவாப் பட்டோடி காலம் முதற்கொண்டு இன்றைய தோனி வரை அனேக கேப்டன்களின் ஆட்டத்திறமையை கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.

இளம் வயதிலேயே வெஸ்ட் இண்டிசின் புயல் வேக பந்து வீச்சை அச்சமின்றி எதிர் கொண்ட பட்டௌடி, இளம் வயதிலேயே கேப்டன் ஆனார். ஒரு அருமையான பேட்ஸ்மன். அவருடைய காலத்தில் டெஸ்ட் மேட்ச் மட்டுமே விளயாடப்பட்டு வந்தது. அதுவும் அப்பொழுதெல்லாம் கிரிக்கெட்டை ஜெண்ட்ல்மேன் விளையாட்டு என வர்ணித்து வெற்றித் தோல்விகளைப் பற்றி கவலைப் படாமல் விளையாடுவார்கள். அதனால் விளையாட்டில் பெரிய வியூகங்கள் வகுக்க வேண்டிய அவசியம் எல்லாம் அவர்களுக்கு இல்லை.அதனால் கேப்டனின் திறமையைப் பற்றி யாரும் அதிகமாக விவாதிப்பது இல்லை.

பட்டௌடிக்குப் பின் ஒரு சிலர் கேப்டனாக வந்தாலும் அஜித் வடெக்கர் கேப்டனாக இருந்த போதுதான் இந்திய அணி கொஞ்சம் கன்சிஸ்டன்சியாக விளையாட ஆரம்பித்தது. அவருக்குப் பின் சுனில் கவாஸ்கர் கேப்டன் ஆன பிறகுதான் இந்திய அணி ஒரு புத்துணர்வைப் பெற்றது. மிகுந்த திறமையான பேட்ஸ்மேனான கவாஸ்கரை அவுட்டாக்குவது என்பது அன்றைய டீம்களுக்கு மிகப் பெரிய சவாலாகவே இருந்தது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி இறுதிவரை ஆட்டம் இழக்கமால் ஆடக்கூடிய அற்புதமான பேட்ஸ்மேன் கவாஸ்கர். ஆனால் கேப்டனாக அவரது செயல் பாடுகள் பலத்த விமர்சனங்களுக்கு உள்ளானது. ஒருதலை பட்சமாக நடக்கிறார் என்று குற்றசாட்டு எழுந்தது. வெங்கட் ராகவன் போன்ற திறமையான வீரர்கள் இவரால் ஓரம் கட்டப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இவர் கேப்டனாக இருந்தபோது அணியின் ஒற்றுமை குறைந்து போனது. ஒரு நாள் போட்டிகளில் தனிப்பட்ட முறையிலும் இவர் சரிவர ஆடவில்லை. அறுபது ஓவர் அவுட்டாகாமல் இருந்து வெறும் 36 ரன் எடுத்தது இவருடைய மிகப் பெரிய வீழ்ச்சியாகும்

தனிப்பட்ட முறையில் 10000 ரன் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமை மிகு பேட்ஸ்மேனாக இருந்த போதும் கேப்டனாக இவர் சரிவர செயல்படவில்லை என்பதுதான் உண்மை.. இதைப் போலவே பேடி, வெங்க் சர்க்கார் போன்றவர்கள் திறமையான பௌலர்களாகவும் பேட்ஸ்மேன்களாக இருந்தபோதும் கேப்டனகளாக ஜொலிக்கவில்லை . அதிரடி ஆட்டகாரர் கபில் தேவ் கேப்டனாக இருந்த போது எடுத்த பல தவறான முடிவுகளால் இந்திய அணி பல தோல்விகளை சந்தித்தது. எனினும் ஒரு நாள்1983 உலக கோப்பையை வென்றது அற்புதமான ஒரு நிகழ்வாகும். இதில் கபில் தேவ் பெரும் பங்கு ஆற்றியிருக்கிரார் என்பதும் மறக்க முடியாத உண்மையாகும்.

அஸாருதின் சூதாட்டப் புகாரில் சிக்கியவர் என்பதால் அவரது கேப்டன்சியை இங்கு விமர்சிப்பதே அர்த்தம்ற்றது. சச்சின் டெண்டுல்கர் அவருடைய பதட்டமடையாத் தன்மைக்காக பெரிதும் பாரட்டப்படுபவர். ஆனால் அவர் கேப்டனாக இருந்தபோது மிகுந்த பதட்டத்துடனேதான் காணப்படுவார். இந்த பதட்டமே அவருடைய கேப்டன்சியையும் அவருடைய பேட்டிங்கையயும் வெகுவாக பாதித்தது. அதன் காரணமாகவே கேப்டன்சி பொறுப்பிலிருந்து விலகிகொண்டுவிட்டார். டெண்டுல்கருக்குப் பிறகு கேப்டனான சவ்ரவ் கங்குலி இன்றைய இந்திய அணியின் வெற்றிகளுக்கெல்லாம். அஸ்திவாரமாக அமைந்தவர் என்றால் அது மிகை ஆகாது. வெற்றிப் பெற்றாக வேண்டும் என்ற முனைப்பை இந்திய அணிக்குள் புகுத்தியவர் கங்குலி. எதற்கும் விட்டு கொடுக்காமல் வெற்றி ஒன்றே குறிக்கோளாக விளையாடியவர் கங்குலி. பல வெற்றிகளையும் பெற்று தந்தார். ஆனால் வியூகங்களை வகுப்பதில் மிகுந்த திறமையுடன் செயல் பட்டார் என்று கூற முடியாது.

தோனி கேப்டன் ஆன பின்புதான் இந்திய டீம் ஒரு புதிய திசையையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.குழுவுக்குள் ஒற்றுமை, சிறப்பான விளையாட்டு வீயுகங்கள்,பந்து வீச்சாளர்களை சுழற்றும் முறை என அத்தனையயிலும் தனது தனி திறமையை காட்டினார் தோனி. டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20-20 என்று அனைத்திலும் சாதனைகளை படைத்தார் தோனி. 20-20 உலக கோப்பையை வென்றார். டெஸ்ட் குழுக்களில் நம்பெர் ஒன் குழுவாக இந்தியாவை கொண்டு சென்றார். இதோ ஒரு நாள் போட்டிக்கான உலக கோப்பையினையும் வென்று காட்டியிருக்கிறார்.ஆடம்பரமில்லாதப் பேச்சு, எல்லோரையும் அரவணைத்து செல்லும் பாங்கு, இளைஞர்களுக்கு உரிய பங்கு அளித்தல், மூத்த வீரர்களுடன் இணக்கமான அணுகுமுறை என ஒரு கேப்டனுக்குரிய அனைத்திலும் மிக மிக சிறப்பாக செயல் படக்கூடிய கேப்டன் தோனி என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தோனிக்கு நிகரான கேப்டன்ங்கள் எவருமில்லை. அவருடைய கேப்டன்சி நீடிக்கவேண்டும்.இந்திய வெற்றிகள் மேன்மேலும் தொடர வேண்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக